“எந்தப் பெண்ணிடம் இல்லாத ஒன்று... அது ஏதோ உன்னிடம் இருக்கிறது. அதை அறியாமல் விட மாட்டேன். அதுவரை உன்னைத் தொடமாட்டேன்...”- என்று தன்னுடைய செல்போன் காலர் டியூனை மாற்றி வைத்திருந்தார் மதியார்.

“என்ன மதியாரே, நீரும் திடீரென்று குஷ்பு ரசிகையாகி விட்டீரா? கேப்டன் மகள் படத்தில் குஷ்பு பாட, பிரபலமான பாடலை திடுமென செல்போன் காலர் டியூனாக மாற்றிவிட்டீரே?” என்றோம்.
“ஊரே, இன்றைக்கு குஷ்பு தி.மு.க-வில் இணைந்த விவகாரத்தைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறது. அதான், குஷ்பு நடித்து வெளிவந்த படத்தில் இருந்து ஒரு பாடலை காலர் டியூனாக்கிக் கொண்டேனாக்கும்... தப்பா?” என்று வெகுளித்தனமாகக் கேட்டார் மதியார்.
“அதிலென்ன தப்பியிருக்கிறது? உமக்குப் பிடித்ததை நீர் காலர் டியூனாக வைத்துக் கொள்கிறீர்! கொஞ்ச காலத்துக்குப் பிறகு வேறொன்றை மாற்றிவிடப் போகிறீர்... சரி, செய்திக்கு வாரும்...”
என்று மதியாரை சேகரித்து வந்திருந்த செய்தி சுரங்கத்துக்குள் இறக்கி விட்டோம்.
“குஷ்பு சம்பந்தமாகவே இத்தனை தூரம் பேசியாச்சு... ஆரம்பமே குஷ்பு சம்பந்தப்பட்ட செய்தியாக இருக்கட்டுமே!” என்ற மதியார், “குஷ்பு, தி.மு.க-வில் இணைந்ததும் வாரப் பத்திரிகைகள் அனைத்தும் தொடர்ந்து பேட்டி, பேட்டி என்று குஷ்புக்கு போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். பத்திரிகையின் பெயரைச் சொன்னதும், ‘நீங்க, எனக்கு எதிரா போராடிய பா.ம.க-வுக்கு ஆதரவா செய்தி போடறவங்களாச்சே... உங்க பத்திரிகை சென்னையிலயே ஒழுங்கா கிடைக்கறதில்லையே... நீங்க, நியாயத்தை எழுத மாட்டீங்களே... உங்களுக்கு செக்ஸ் மேட்டர்கள்தானே, பிரதானம்!’ என்றெல்லாம் வம்படியாகப் பேசி, கலாய்க்கிறாராம். ‘பிறகு, பேசுங்க பார்க்கலாம்...’ என்று சொல்லி, பொறுமையைச் சோதித்துவிட்டு, தொடர்ந்து போன் பேசி ஆர்வமாக இருந்தால் மட்டும், அழைத்துப் பேட்டிக் கொடுக்கிறாராம். இப்படி எரிச்சல் கலந்தி டீஸிங்காக குஷ்பு பேசிய பின்னாலும், வாரப் பத்திரிகைகள் வரிசையாக அவர் வீட்டு வாசலை மிதித்துக் கொண்டிருப்பது, குஷ்பு மீது பத்திரிகையாளர்களுக்கு கடும் எரிச்சலைக் கிளப்பி இருக்கிறதாம்.
அதோடு, கடந்த 16-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் கணக்காக பத்திரிகையாளர்கள் பலரையும் வீட்டுக்கு வரச் சொன்ன குஷ்பு, இருபது இருபது நிமிடங்கள் மட்டும் பத்திரிகைகளுக்கு நேரம் ஒதுக்கி, சொன்னதையே எல்லோரிடமும் தொடர்ந்து சொல்லி அனுப்பினாராம். அதுதான், இந்த வாரத்தின் அனைத்து பிரதான வார இதழ்களிலும் குஷ்பு பேட்டி அசத்தலாக வெளியாகி இருக்கிறதாம்...”
“என்ன செய்வது? கொஞ்ச காலத்துக்கு இப்படித்தால் எல்லா பத்திரிகைகளிலும் குஷ்பு அலங்கரிப்பார்...”
“அது இயற்கைதானே! திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் உறவுக் கொள்வதில் தப்பில்லை என்று புரட்சிகரமான கருத்துக்களை அள்ளிவிட்டதன் மூலம் தமிழகம் முழுவதும் ஒருசேர எதிர்ப்பை சம்பாதித்த நடிகை குஷ்பு, சமீபத்தில் தி.மு.க-வில் இணைத்துக் கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழக ம் முழுக்க போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதையும், சென்னை கண்ணகி சிலை முன்பாக தோப்புகரணம் போட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பது குறித்தும் ஏற்கெனவே சொல்லியிருந்தேனில்லையா? அதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சியின் மாநில நிர்வாகியான போரூர் கண்ணனும் வேறு சில நிர்வாகிகளும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார்கள்.”
“அனுமதி கிடைத்துவிட்டதாமா?”
“அதைப் பற்றித்தானே சொல்ல வருகிறேன். ‘குஷ்புவை எதிர்ப்பதாக எங்கும் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கக் கூடாது என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. அதனால், குஷ்புவுக்கு எதிராக நீங்கள் தமிழகத்தில் எங்கும் போராட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்த முயன்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்...’ என்று மிரட்டும் தொனியில் வார்த்தைகளை இறக்கினார்களாம். ‘அப்படியென்றால், குஷ்புவின் கருத்துக்களோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா?’ என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கேட்க, ‘உச்ச நீதிமன்றமே குஷ்புவின் கருத்தை ஆதரித்துத் தீர்ப்புச் சொன்னப் பிறகு, குஷ்பு சொன்னக் கருத்து சரிதான். அதனை எதிர்க்க யாருக்கும் உரிமை கிடையாது...’ என்று தீர்க்கமாகச் சொல்லி அனுப்பி விட்டார்களாம்...”
“அப்ப, போராட்டமெல்லாம் அடிப்படையிலேயே புஸ்ஸ் ஆயிடுச்சுன்னு சொல்லும்...”
“அப்படியில்லையாம். குஷ்புவின் கருத்துக்களை எதிர்த்து பிரசார இயக்கம் நடத்த போலீஸிடம் அனுமதி கேட்கப் போகிறார்களாம். அதற்கும் அரசு தரப்பிலிருந்து அனுமதி இல்லை என்றால், ‘தமிழகத்தில் பேச்சு சுதந்தரம் கருத்துச் சுதந்தரத்துக்கு பாதிப்பு...’ என்று சொல்லி கோர்ட்டை நாடப் போகிறார்களாம். இதற்கிடையில், வேறு தலைப்புகளின் கீழ் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அதில் முழுக்க முழுக்க குஷ்புவை எதிர்த்து பேசிவிடவும் இந்து அமைப்புகள் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்...”
“மொத்தத்தில், ‘லைலா’ ஸாரி... குஷ்பு புயல் ஓயாதுன்னு சொல்லும்...”
“கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல. எப்படியோ, மே 17, பிரபாகரன் மாரணமடைந்த நினைவு தினம், பெரிய அளவில் பிரச்னையில்லாமல் தமிழகம் கடந்து விட்டது. அந்த வகையில் குஷ்பு, திடுமென தி.மு.க-வில் இணைந்ததற்கு போலீஸ் தரப்பில் குஷ்புவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்...”
“சரியாக முடிச்சுப் போடுகிறீர்!”
“நான் சொல்வதில் தவறு இருக்கிறதா என்பதை மட்டும் தீர்க்கமாக யோசித்துப் பாரும். உள்ளார்ந்த விஷயங்கள் புரியும்...” என்ற மதியார், “சுவாரஸ்யமான விரால் மீன் சப்ளை குறித்தத் தகவல் வேணுமா?” என்றார்.
“கேட்கவே, நாக்கு ஊறுகிறதே! சரி, செய்தியையாவது, சுவைபட கேட்போம். சொல்லும்...”
“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் ஜி.கே. மணிக்கு, தன்னுடைய ஏரியாவான மேட்டூர் பகுதியில் இருந்து குளத்தில் வளர்க்கப்படும் விரால் மீனை உயிருடன் பிடித்து வந்து, சென்னையில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்குக் கொடுத்து, எல்லா வீடுகளிலும் ஒரே நாளில் மீன் குழம்பும், மீன் வறுவலும் உணவாக இருக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்ததாம்.

இந்த வருடம் மே 14-ம் தேதிதான் அதற்கு சரியான நாளாக வாய்த்ததாம். ஊரிலிருந்து கிலோ கணக்கில் மீன்களை உயிரோடு சென்னைக்குக் கொண்டு வந்து, முதல்வர் வீட்டில் இருந்து ஆரம்பித்து எதிர்கட்சித் தலைவர் வீடு வரைக்கும் மீன் சப்ளை செய்து மகிழ்ந்தாராம் கோ.க. மணி. இதில் அ.தி.மு.க. தரப்பிலும் சில வி.ஐ.பி-க்கள் வீடுகளுக்கு போனதாம் மீன்.”
“பா.ம.க. தரப்பு ஆட்களுக்குப் போனதாமா?”
“அதுபற்றி என்னிடம் விவரங்கள் எதுவுமில்லை...” என்று சொல்லி, கழுவுற மீனில் நழுவுற மீனாக வழுக்கிபடியே அடுத்த செய்திக்குப் போனார் மதியார்.
“கடந்த ஓராண்டுக்கு முன்னால், மே 17-ம் தேதிதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோர் இறந்துவிட்டார்கள் என்று சொல்லி, இலங்கை ராணுவம் சில உடல்களை வெளியுலகிற்குக் காட்டியது.
அதன் தொடர்ச்சியாக, ‘இலங்கையில் விடுதலைப்புலிகளின் சகாப்தம் முடிந்தது...’ என்று சொல்லி, சூளுரைக்க ஆரம்பித்தார் இலங்கையின் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இருந்தாலும், பிரபாகரன் இறந்து போனது குறித்து இன்றளவிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் நம்பமுடியவில்லை. அவர்களின் இரண்டு கெட்டான் நிலையை வாகாகப் பயன்படுத்தி இன்றளவிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், தமிழ் ஆதரவுத் தலைவர்கள் பலரும். இந்த விவகாரம்தான் தற்போது தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது.”
“சரி, என்ன விவகாரம் அது?”
“இந்தாண்டு மே 17-ம் தேதியன்று உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று திரண்டு, மே 17-ம் தேதியை உலக போர் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையை போரில் கொடூரத்தை அரங்கேற்றிய நாடாகவும் அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் போட்டுக் கலைந்திருக்கிறார்கள். கூடவே, தமிழகத்தில் இருக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவு மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தலைவர்களின் இரட்டை வேடங்கள் குறித்தெல்லாம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்.

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன் மீதுதான் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்களாம். ‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கு ஆதரவாக நின்ற தமிழக அரசுக்கு இன்றளவிலும் ஆதரவாக நின்று கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றி உருகி உருகி பேசும் திருமாவளவன் இனிமேல் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்துப் பேச வேண்டாம்...’ என்றும் ‘திருமாவளவனை இந்தப் பிரச்னைகளுக்காக வெளிநாடுகளுக்கு தமிழர்கள் யாரும் அழைக்க வேண்டாம்...’ என்றும் பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம். இவரைப் போலவே, தமிழகத்துத் தலைவர்கள் பலருக்கும் எதிராக கடுமையான அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதாம்...” “ஓ!”
“திராவிட இயக்கத்து மூத்தத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி மறைந்த தகவல் கேள்விபட்டதும், அவருடைய வீட்டுக்குச் சென்று முதலில் அஞ்சலி செலுத்திவிட்டார் முதல்வர் கருணாநிதி. வழக்கமாக இப்படி முதல்வர் முதலில் சென்று விட்டால், அவர் எத்தனைப் பெரியத் தலைவராக இருந்தாலும், அஞ்சலி செலுத்தப் போகமாட்டார் ஜெயலலிதா. இந்த நடைமுறையை நினைத்து, கே.ஏ.கே., மறைவுக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வரமாட்டார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, மதியம் இரண்டரை மணிவாக்கில் தோழி சசிகலா சகிதம் கே.ஏ.கே. வீட்டுக்கு வந்துவிட்டார் ஜெயலலிதா. மாடியில் உடல் வைக்கப்பட்டிருந்ததால், மேலே படியேறி செல்வதைத் தவிர்த்த ஜெயலலிதா, மலர்வளையத்தை தோழி சசிகலாவிடம் கொடுத்து வைக்கச் சொல்லிவிட்டு, கீழேயே இருந்துவிட்டு திரும்பினாராம். கே.ஏ.கே., குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன ஜெயலலிதா, கே.ஏ.கே., கட்சிக்காக உண்மையாக எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பது குறித்த நினைவுகளையெல்லாம் சொல்ல கே.ஏ.கே., குடும்பத்தினர், நெகிழ்ந்து போனார்களாம். இருந்தாலும், வீடு வரை வந்துவிட்டு, கே.ஏ.கே., உடலை பார்க்காமல் ஜெ. திரும்பியது, குடும்பத்தினருக்கு வருத்தம்தானாம்...”
“வீடுவரைக்கும்தான் வந்துவிட்டார்ல...”
“வருகிற 22-ம் தேதி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநாடு சென்னையில் நடக்கவிருக்கிறது. ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் சூரியமூர்த்திதான், மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்ட முனைப்பாக இருக்கிறார். முதல்வர் கருணாநிதியையும் மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே 2005-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்படித்தான் சென்னை, கோயம்பேட்டில் வைத்து இப்படியொரு மாநாட்டை நடத்தினார் சூரியமூர்த்தி. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், மாநாட்டுக்கு வருகைதந்து நிறைய பேசினார். நிறைய வாக்குறுதிகளையும் கொடுத்து வந்தார். ஆனால், அவர் அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வரவில்லை. இந்தத் தகவலைச் சொல்லி, இந்த மாநாட்டுக்கு குந்தகம் விளைவிக்க சிலர் முயன்று கொண்டிருக்கிறார்களாம். அதாவது, ‘இவர் மாநாடு போட்டால், யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர் அடுத்து ஆட்சிக்கு வரமாட்டார்கள்... அப்படியொரு செண்டிமென்ட் இருக்கு’ என்று சூரியமூர்த்திக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட, அது தி.மு.க. தரப்பை அடைந்திருக்கிறதாம். அதனால், இந்த மாநாட்டுக்கு போக விடாமல் எப்படியாவது முதல்வரை தடுத்துவிட வேண்டும் என்று தி.மு.க-வினர் பலரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்...”
“அடப்பாவமே... இதெல்லாம் சூரிய மூர்த்திக்குத் தெரியுமா?”
“தெரியாமல் இருக்குமா? கடைசி நேரத்தில் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டி காரியமாற்றிக் கொண்டிருக்கிறாராம். இதற்கிடையில், அலுவலர் ஒன்றியத்தின் பெயரில் மாநாட்டுக்கென்று வசூல் வேட்டை நடக்கிறதாம். சீரியல் எண்கள் கூடப் போடாமல் நன்கொடை வசூலிப்பதற்கென்று ரசீது புத்தகம் அடித்து, தமிழகம் முழுக்க அரசு ஊழியர்களிடம் வசூல் வேட்டை செய்கிறார்களாம். இதெல்லாம் முறையாக ஒன்றியத்துக்குச் செல்கிறதா? அல்லது தனியார் பாக்கெட்டுகளை நிரப்புகிறதா? என்று புலம்புகிறார்களாம் அரசு ஊழியர்கள்.”
“நியாயம்தானே?”
“தமிழக தேர்தல் ஆணையாளராக இருக்கும் நரேஷ் குப்தாவுக்கு தி.மு.க. அரசுக்கு ஆரம்ப காலம் தொட்டே ஏழாம் பொருத்தமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக மேலவை அமைப்பது தொடர்பாக சிறப்பு அதிகாரியாக ஜமாலுதீன் ஐ.ஏ.எஸ்., என்பவரை நியமித்திருக்கிறார்கள். இப்படி மேலவை அமைப்பது தொடர்பான விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாமல் எதையும் செய்யக் கூடாதாம். ஆனால், இந்த நியமனம் குறித்து தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தாவுக்கு கடைசி நிமிடம் வரையில் எதுவுமே தெரியாதாம். மனிதர் கொதித்துப் போய் தமிழக அரசுக்கு படுகாட்டமாகக் கடிதம் அனுப்பி விட்டாராம். இதுதான் தலைமைச் செயலகத்தில் இப்போது ஹாட் விவாதப் பொருள்...”
“தமிழக அரசு என்ன செய்யும்?”
“என்ன செய்வார்கள்? ஏதாவது ஒரு பதிலை எழுதி அனுப்பி விடுவார்கள். நரேஷ்குப்தாவும் வேறு எதுவும் செய்ய முடியாமல், அமைதியாகி விடுவார். இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், வரும் ஜூலை மாதத்தோடு நரேஷ்குப்தா ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்தபடியாக தங்களுக்கு இணக்கமானவரை தேர்தல் ஆணையராகக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு தரப்பில், சீனியர் அந்தஸ்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். யாருமே சிக்க மாட்டேங்கிறாங்களாம்.”
“யாரும் கிடைக்காமலா போய்விடுவார்கள்?”

“ ‘தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பெரும் மாறுதலுக்கு பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது’ என்று சொல்லியிருந்தேனில்லையா? அதுபடியே, மாறுதல் வந்துவிட்டது. தலைமைச் செயலாளர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, மாலதி ஐ.ஏ.எஸ்-ஸை விஜிலென்ஸ் கமிஷனராக நியமித்து விட்டார்கள். நிதித் துறைச் செயலாளராக இருந்த ஞான தேசிகனை உள்துறைச் செயலாளராக்கி விட்டார்கள். ஞானதேசிகனுக்கும் மாலதிக்கும் நடந்த கடுமையான பனிப்போரில் ஞானதேசிகன் வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கோட்டையில் இருந்தபடி ஞானதேசிகனுக்காக பனியாற்றிக் கொண்டிருந்த லாபி இறுதியில் வெற்றியடைந்திருக்கிறது.
பவர்புல்லாக இருந்த மாலதியை அங்கிந்து தூக்கிவிட்டு, அந்த இடத்துக்கு தான் வந்து உட்கார்ந்து விட்டார் என்றால், சும்மாவா? இதற்கிடையில், மாலதிக்கு விஜிலென்ஸ் கமிஷனர் பதவி கொடுத்திருக்கும் விவரம் அறிந்து, கோட்டையில் இருக்கும் பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடுங்கிப் போயிருக்கிறார்களாம். கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு கொண்ட மாலதி, தொட்டதுக்கும் விஜிலென்ஸ் என்கொயரிக்கு உத்தரவிட்டுவிட்டால் என்ன செய்வது? என்பதுதான் அவர்களுடைய நடுக்கத்துக்குக் காரணமாம்...”
“அரசாங்க உத்தியாகம்னாலே இப்படித்தான், கண்டதுக்கும் பயப்பட வேண்டும் போல...” என்று நாம் சொல்ல, “நம்ம வேலை மட்டும் என்னவாம்?” என்று கமென்ட் விட்டபடியே, புறப்பட்டார் மதியார்.
No comments:
Post a Comment