
‘‘ஐயையோ... சிரச சனியா? ஆபத்துன்னுல சொல்லுவாங்க. இரண்டாவது ஏழரைன்னாலே கொஞ்சம் படுத்தித்தானே வைக்கும். பொறுமையா மட்டும் இரண்டரை வருஷத்தைத் தள்ளச் சொல்லிடுங்க. அதுக்குப் பின்னால, சனியே ரொம்ப நல்லது செஞ்சிட்டுப் போகும்...’’ என்று ஜோதிடராக மாறி யாருக்கோ செல்போன் மூலம் தகவல் சொல்லிக் கொண்டே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார் மதியார்.
சகல விஷயங்களிலும் மதியார் நுட்பமான அறிவோடு இருப்பதை நினைத்து பெருமையாக அவரை ஏறிட்டோம்.
‘‘ஒண்ணுமில்லை. என்னோட நண்பர் ஒருத்தர் ரொம்ப நல்ல மனுஷன். ஆபீஸுலயே அவர்தான் டாப்பான ஆசாமியா இருந்தார். ஏழரை சனி. மனுஷனை போட்டு ஆட்டுது. பக்கத்து ஸீட்டுலயே உட்கார்ந்துகிட்டு இருக்கறவங்கலெல்லாம் மாலை நேரத்து ஹோட்டல் திருவிழாவுக்கு ஓனரை அழைச்சுகிட்டுப் போய், அவருகிட்ட நம்ம நண்பரைப் பத்தில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், பீரடித்துப் போன ஸாரி, கிர்ர்ரடித்துப் போன ஓனர், திடுமென அவரை பதவி இறக்கம் பண்ணி தன்னோட அதிகாரத்தைக் காட்டிட்டாராம். இதத்தான் அவரு வீட்டுலயிருந்து சொல்லிகிட்டு இருந்தாங்க. அதுக்குத்தான் ஆறுதலா, ஏழரை சனி கொடூரம் பத்தி எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். சரிதானே?’’ என்று அப்பாவியாகக் கேட்டார் மதியார்.
‘‘நீர் எது செய்தாலும் சரிதான்...’’ என்று நாம் சொல்ல, மதியார் அரசியல் ரீதியில் நடக்கும் ஜோதிடர் மோதல் குறித்தத் தகவலுக்குள் புகுந்தார்.
‘‘ ‘புதிய சட்டமன்ற வளாகக் கட்டடம் ஜோதிடர்கள் அறிவுரைபடி கட்டப்பட்டிருக்கிறது. இப்படியொரு மோசமான கட்டடத்தை நான் பார்த்ததே இல்லை’ என்கிற ரீதியில் சமீபத்தில், புதிய சட்டமன்ற வளாக கட்டடம் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஜோதிட நம்பிக்கைக் குறித்தும் நிறையவே வாரியிருந்தார். இதனைத் தொடர்ந்து கண்ணகி சிலை அப்புறப்படுத்தப்பட்டதில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை மேற்கோள்காட்டி ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கைகள் குறித்தெல்லாம் பதில் வாரல் செய்திருந்தார் கருணாநிதி. அதில், எனக்கு சிறுவயது முதற்கொண்டே இந்த ஜோதிடத்தின் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லை என்றெல்லாம் சொல்லியிருந்தார் முதல்வர். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பு தீவிரமாக களமிறங்கி ஒரு விஷயத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறது.’’ என்றார் மதியார்.
‘‘என்ன செய்யப் போகிறார்களாம்?’’

‘‘ஒன்றுமில்லை. கருணாநிதி தனக்கு ஜோதிட நம்பிக்கையில்லை என்று தெரிவித்ததை பொய்யாக்கும் விதமாக ஆதாரம் எதுவும் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்களாம். முதல்வர் இல்லத்துக்கும் அவருடைய துணைவியார் ராசாத்தியம்மாள் வீட்டுக்கும் வந்து செல்லும் ஜோதிடர்கள் யார் யார் என்கிற கண்டுபிடிப்புப் பணியில்தான் தீவிரமாக இறங்கி இருக்கிறார்களாம் அ.தி.மு.க&வினர். விசாரணையில் எந்தந்த ஜோதிடர்களெல்லாம் முதல்வர் இல்லத்துக்குச் சென்று வருகிறார்கள் என்றெல்லாம் தகவல் கிடைத்திருக்கிறதோ, அந்த ஜோதிடர்களையெல்லாம் அ.தி.மு.க. நபர்கள் பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்களாம். அவைகளெல்லாம் ரகசிய கேமராக்கள் மூலம் பதிவெடுக்கப்படுகிறதாம்.’’
‘‘ஐயையோ, அதை வெச்சு என்ன செய்யப் போறாங்களாம்?’’
‘‘என்ன செய்வாங்க? இதுகூட புரியலையா உமக்கு? ஜோதிட விஷயத்தில் முதல்வர் சொன்னதை பொய்னு ஆதாரத்தோடு நிரூபிப்பதற்காகத்தான் இந்த முயற்சியாம். முதல்வர் இல்லங்களில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் மறாமத்துப் பணிகளெல்லாம்கூட ஜோதிடர் அறிவுரையின்படியே நடைபெறுவதாக அ.தி.மு.க. தரப்புக்குத் தகவல் கிடைத்திருக்கிறதாம்.
அதேபோல, முதல்வரின் துணைவியார் ராசாத்தியம்மாளுக்குச் சொந்தமான ராயல் பர்னிச்சருக்கு வருகை தரும் ஜோதிடர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கிறதாம். அங்கும்கூட சர்வலைன்ஸுக்கு ஆட்கள் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பத்திரிகைகளில் தற்போது வார ராசிபலம் எழுதுவதில் முன்னணியில் இருக்கும் ஒரு ஜோதிடர்தான் தற்போது ராசாத்தியம்மாளுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருக்கிறார் என்கிற தகவல் கிடைக்க, அந்த ஜோதிடரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறதாம், அ.தி.மு.க. தரப்பு...’’
‘‘அடேங்கப்பா, ஜோதிட விஷயத்திலேயே இத்தனை இருக்கிறதா?’’
‘‘பின்னே, இதெல்லாம் இருப்பதால்தானே அரசியல் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதுமட்டுமா? முதல்வர் இல்லத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஜோதிடர் பெரும் தொகை ஒன்றை களவாடிச் சென்று விட்டதாகவும், அதனை வெளியே தெரியாமல் போலீஸில் புகார் கொடுத்து திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாகவும் அ.தி.மு.க. தரப்புக்குத் தகவல் கிடைக்க, அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறதாம் அ.தி.மு.க. தரப்பு. அ.தி.மு.க. தரப்பு, முதல்வர் இல்லங்களில் ஜோதிட நடமாட்டம் குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது என்றவுடன், சும்மா நாம் கே வாஸாக சிலர் தகவல்களை அடித்துவிடவும் செய்கிறார்களாம். இதில் எத்தனை உண்மை? எத்தனை பொய் என்று தெரியாமல், நிறைய விவரங்களை வைத்துக் கொண்டு அ.தி.மு.க. தரப்பினர் தடுமாறி வருவதாகவும் தகவல்...’’
‘‘மொத்தத்தில் எல்லாமே இன்ட்ரஸ்டிங்!’’
‘‘அரசியல்&வியாபார பவர் புரோக்கராக இருந்து செயல்பட்ட நீரா ராடியா என்கிற பெண்மணியின் புரோக்கர் பணிகளெல்லாம் அவருடைய டெலிபோன் பேச்சுப் பதிவிலிருந்து வெளியாக அரசியல்+பிஸினஸ் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியது.

இருந்தாலும், நீரா ராடியா அது குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லையாம். தன்னுடன் பயமில்லாமல் தொடர்பில் இருப்பவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறாராம். பவர் புரோக்கர் வேலை அநாயசமாகத் தொடருகிறதாம். ஆனால், மத்தியில் இருக்கும் ஒரு சில அமைச்சர்கள் மட்டும், ‘நீரா ராடியா ஹியர்’ என்றாலே, நெருப்பை மிதித்தது போல உணருகிறார்களாம். சட்டென சுதாரித்து, ‘மேடம், ஐ வில் கால் யு பேக்!’ என்று சொல்லி, செல்போனை துண்டித்துவிடுகிறார்களாம். இப்படி செல்போனை துண்டிப்பதில் தமிழகத்து அமைச்சர்கள் சிலர் முக்கியமானவர்களாக இருக்கிறார்களாம். நீரா ராடியாவால் வேறு எதுவும் பிரச்னை கிளம்பி விடக் கூடாது என்பதில் ரொம்பவே சுதாரிப்பாக இருக்கிறார்களாம், நம்ம ஊரு ஆட்கள்...’’
‘‘பயமோ, எச்சரிக்கையோ... இருக்கட்டும், இருக்கட்டும்!’’
‘‘உள்துறை அமைச்சர் பொறுப்பு ரொம்பவே சிக்கலாக இருப்பதாக உணருகிறாராம், ப.சிதம்பரம். சிலர் தன்னை திட்டமிட்டுப் பழி வாங்கி விட்டதாக நினைக்கிறாராம். ‘நிதியமைச்சர் பொறுப்பு என்றாலும், கொஞ்சம் கடுமையான பணிச்சுமை கொண்டதுதான். இருந்தாலும், அதில் இத்தனை சிக்கல்கள் கிடையாது...’ என்று சொல்லும் ப.சிதம்பரம், சமீபத்தில் சட்டீஸ்கரில் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 50&க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். இது மத்திய அரசுக்கு விடப்பட்ட சவால் என்பதை விட, தீவிரவாதிகள் விஷயத்தில் கெடுபிடியோடு நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதாகத்தான் தீவிரவாதிகள் வட்டாரங்களில் இருந்து பரவும் செய்தியாம். இதுகூட ப.சிதம்பரத்தை ரொம்பவும் அப்செட்டாக்கி இருக்கிறதாம். ‘ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல், தீவிரவாதிகளை ஒடுக்குவதில் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவுதான், இத்தனை தூரத்துக்கு விசுவரூபமெடுத்து நிற்கிறது...’ என்று பழியை சிவராஜ் பட்டீல் மீது சுமத்தினாலும், இன்றைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது ப.சிதம்பரம்தான்.’’
‘‘இத்தனை கஷ்டமான அந்தத் துறையை ஏன் சுமக்க வேண்டும்?’’
‘‘இதனை ப.சிதம்பரம் மட்டும் நினைக்காமல் இருப்பாரா என்ன? அவரும் பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் தன்னை இந்தத் துறையில் இருந்து விடுவிக்குமாறுதான் கோரிக்கை வைக்கிறாராம். ஆனால், பிரதமர்தான் விடமாட்டேங்கிறாராம். ‘நானோ, சோனியா காந்தியோ உங்கள் செயல்பாடுகளிலோ நடவடிக்கைகளிலோ திருப்தியில்லாமல் இருந்தால்தான் நீங்கள் வருத்தப்பட வேண்டும். கஷ்டமான பணியை சுமப்பதற்கு உங்களைப் போன்ற சிலரால்தான் முடியும்... ராஜினாமா என்ற எண்ணத்தோடு, இனிமேல் என்னை சந்திக்க வேண்டாம். நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், நாங்களே கூப்பிடுகிறோம்...’ என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.

இதனால், வேறு எதுவும் செய்ய முடியாமல் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் தீவிரமாக இறங்க ஆரம்பித்து விட்டாராம் ப.சிதம்பரம். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு வான் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறு தரப்பிலும் சொல்லப்பட்டாலும், இந்தியா போன்ற ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளுக்கு அது சரிபட்டு வராது என்பதுதான் அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தாம். ‘வான் நடவடிக்கைகளை ஆரம்பித்தால், அப்பாவி பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்திய அளவில் இருக்கும் பிரச்னை, உலக அளவிலான பிரச்னையாகி விடும். பிறகு, உலக நாடுகள் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் மூக்கை நுழைக்க ஆரம்பித்துவிடும். ஐக்கிய நாடுகள் சபையும் வரும். இலங்கை அனுபவிக்கும் பிரச்னைகளை தொடர்ச்சியாக இந்தியாவும் அனுபவிக்க வேண்டி வரும். இதனால், பொருளாதார பாதிப்புகளும் பெரிய அளவில் ஏற்படும். அதனால்தான் தீவிரவாதிகள் விஷயத்தில் அதிக கவனமும் பொறுமையையும் இந்தியா காக்கிறது...’ என்றும் சொல்கிறாராம் ப.சிதம்பரம். இதற்கிடையில், ‘தீவிரவாதிகள் பந்துக்கு அழைப்பு விடுத்தால், வட மாநிலங்களில் பல மாவட்டங்களில் ஒரு ஈ, காக்காய்கூட குறிப்பிட்ட அந்த தினத்தில் வெளியே வராமல், முழு பந்த் அனுஷ்டிக்கிறார்களாம். ஆக, தீவிரவாதிகளுக்கு மக்கள் செல்வாக்கும் இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது?’ என்றும் கருத்துச் சொல்கிறாராம், ப.சிதம்பரம்.’’
‘‘அவர் தீர்க்கமாவும் நிதானமாகவும்தானே தீவிரவாதிகள் பிரச்னையை எதிர்கொள்வது போலத் தெரிகிறது...’’
‘‘ஆமாம். இதனால்தான், மத்திய அரசு பச்சை ஆபரேஷன் என்ற பெயரில் மக்களுக்கே ஆயுதங்களைக் கொடுத்து, தீவிரவாதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொண்டது. சில மாநிலங்களில் இதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்தாலும், பல மாநிலங்களில் இதற்கு ஆதரவில்லையாம். தீவிரவாதிகள் நடவடிக்கைகளை மக்களே ஆதரிப்பதால், அந்த திட்டம் பெரிய அளவில் எடுபடவில்லையாம். அதனால், முழு வேகத்தில் தீவிரவாதம் வேகமாகப் பரவக்கூடிய கிராமப் புறங்களில் இருக்கும் மக்களை கல்வி&வேலைவாய்ப்பு&பொருளாதாரத்தில் முன்னேற வைக்கும் முயற்சிகளை வேகமாக எடுக்கப் போகிறதாம் மத்திய அரசு. இதைத்தான் ஆந்திராவில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி செய்து, பலன் கண்டாராம். அந்த ஃபார்முலாவை அப்படியே நிறைவேற்ற முடிவெடுத்திருக்கிறார்களாம், மத்திய அரசு தரப்பில். இதற்காக, ஆந்திராவில் ஏற்கெனவே தீவிரவாதிகளை ஒடுக்க எடுக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தெல்லாம் விளக்கமாகக் கேட்டிருக்கிறதாம், மத்திய அரசு...’’
‘‘ஓ, தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு உறுதியாகத்தான் இருக்கிறதாக்கும்?’’
‘‘பின்னே, மத்திய அரசின் தலையாக கடமையல்லவா அது? சரி போகட்டும்... நாம் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி எரிச்சல் குறித்துப் பார்ப்போம்...’’ என்றார் மதியார். சிறு இடைவெளிக்குப் பிறகுத் தொடர்ந்தார். ‘‘டெல்லியில் சில நாட்களுக்கு முன்னால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் இறந்து போனார்களில்லையா? இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட்காரர்கள் சிலர் குரலெழுப்பினார்களாம். இதில் சில காங்கிரஸ்காரர்களின் குரலும் அடங்கி இருந்தாம். ‘ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரெயில்வே துறை நிர்வாகத்தை திறம்பட நடத்தினார். அவர் அமைச்சராக இருந்தபோது, பெரிய அளவில் இந்தமாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை...’

என்றெல்லாம் சொன்னார்களாம். இதனால், கடுமையாகக் கோபமடைந்த மம்தா பானர்ஜி, ரெயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது ஏற்பட்ட ரெயில் விபத்துக்கள் தவிர கூட்ட நெரிசலில் மிதிபட்டு பயணிகள் இறந்த சம்பவம் பற்றியெல்லாம் தெளிவாக விவரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டாராம். பிற்பாடு, இதுகுறித்து பிரதமரிடம் பேசினாராம்.’’
‘‘அச்சச்சோ, ப.சிதம்பரம் போலவே இவரும் பிரதமரிடம் போய்விட்டாரா?’’
‘‘ஆமாம். அவரிடமும் பிரதமர் பொறுமையாக அரசியல் நிலவரங்கள் குறித்தெல்லாம் சொல்லி, ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினாராம். ரெயில்வே நிர்வாகம் சமீப நாட்களில் வருமான பின்னடைவில் இருக்கும் விவரத்தையும் சொல்லி, அதன் மீதும் கவனம் செலுத்தக் கேட்டுக் கொண்டாராம் பிரதமர்... அதன்பிறகுதான், அமைதியானாராம் மம்தா பானர்ஜி! இதற்கிடையில், தீவிரவாதிகள் பிரச்னையோடு தன்னை முடிச்சிட்டு கம்யூனிஸ்ட்காரர்கள் பேசுவது குறித்தும் ரொம்பவே வருத்தப்பட்டு பிரதமரிடம் பேசினாராம் மம்தா பானர்ஜி!’’
‘‘அதற்கும் சமாதானப்படுத்தினாரா பிரதமர்?’’
‘‘கிட்டத்தட்ட பிரதமரை ஒரு பஞ்சாயத்துத் தலைவர் போல எல்லோரும் டீல் செய்வதை நீரும் கப்பென புரிந்து கொண்டு கமென்ட் அடிக்கிறீராக்கும்?’’ என்றார் மதியார்.
‘‘சரி, தமிழகத்தில் நடக்கும் தொடர் மின்வெட்டைத் தவிர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி ஏதேனும் தெரியுமா?’’ என்று கேள்வி போட, ‘‘வில்லங்கத்தோட கேள்வி கேட்பது புரிகிறது. உம்ம பஞ்சாயத்துக்கு இப்போதைக்கு நான் ஆளில்லையாக்கும்...’’ என்று சிக்காமல் தப்பியோடினார் மதியார்.

No comments:
Post a Comment